6 TH STD TAMIL-PONGAL THIRUNAAL KATTURAI-TERM 2


 

பொங்கல் திருநாள் -கட்டுரை

முன்னுரை:

     இயற்கையோடு இணைந்து வாழ்வதே தமிழரின் வாழ்க்கை முறை ஆகும்.இயற்கையை வணங்குதல் தமிழர் மரபு.தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன . அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும்.இது தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது.

போகித்திருநாள்:

     வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை􀁉 செய்யும் நாள் (போக்கி) போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதிநாள் ஆகும். தீயனவற்றை அழித்து நல்லனவற்றையே சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்விழா கொண்டாடப் படுகிறது.

பொங்கல் திருநாள்
   தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள் ஆகும் திருநாள் அன்று வாசலில் வண்ணக் கோலமிடுவர். மாவிலை தோரணம் கட்டுவர். புதுப்பாலையில் புத்தரிசியோடு வெல்லம், முந்திரி, நெய் சேர்த்து பொங்கல் இடுவர். பொங்கல் என்பதற்குப் பொங்கி பெருகுவது என்று பொருள்.

மாட்டுப் பொங்கல்
    பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் மாடுகள் உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுகின்றன. உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன. அவற்றிற்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
காணும் பொங்கல்
     மாட்டுப் பொங்கல் அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும். இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர். குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதை கழிப்பர்
முடிவுரை
   இயற்கை, உழைப்பு, நன்றி உணர்வு, பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழாவாகவே பொங்கல் விழா கொண்டாடப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் உறுதி ஏற்று பொங்கல் விழாவின் மாண்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை