8.ஆம் வகுப்பு-தமிழ் (கட்டுரை,கடிதங்கள்)
இயல்-1 நான்
விரும்பும் கவிஞர்-பாரதியார்
முன்னுரை:
இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி, புதுமைக் கவிஞர், தேசியக் கவி, மகாகவி எனப் பாராட்டப்பட்டவர் நம் பாரதியாரே ஆவார். பாட்டுக்கொரு புலவனாய்த் திகழ்ந்த பாரதி தம் பாடல்கள் மூலம் மக்களிடையே தமிழ்ப்பற்று, விடுதலை உணர்வு ஆகியவற்றை வளர்த்தார்.
பிறப்பும் இளமையும் பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882 ஆம் நாளில் பிறந்தார். இவரின் பெற்றோர் சின்னசாமிஇலக்குமி அம்மையார் ஆவார். சிறிய வயதிலேயே கவிதை புனையும் திறமையைப் பெற்றார். தமது பதினோறாம் வயதில் பாரதி என்னும் பட்டம் சான்றோர்களால் வழங்கப்பட்டது. விடுதலைவேட்கை:
'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்றார். இப்படிப்பட்ட நம் உயர்ந்த பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருப்பதை எண்ணி 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என பாடினார். வெள்ளையரின் அடக்கு முறைக்கு அஞ்சாது விடுதலை உணர்வு மிக்க பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார். ஒருமைப்பாட்டுணர்வு: எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்திய மக்கள் என்றார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே எனப் பாடி மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தினார்.
மொழிப்பற்று:
பல மொழிகளைக் கற்றிருந்த பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும்காணோம்என்றுதமிழின்சிறப்பைஎடுத்துரைத்தார்.
நாட்டுப்பற்று: பாரதத் தாயின் அடிமைத்தனத்தை தகர்த்தெறிய இவர் எழுதிய பாடல்கள் இளைஞர்களைவீறு கொண்டு எழச் செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேடைகளிலும் வீதிகளிலும் இவருடைய பாடல்களையே பாடினார்கள். சமுதாயத் தொண்டு: சாதிக் கொடுமைகள், பெண்ணடிமை, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை இந்நாட்டிலிருந்து விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மதவெறிப் பிடித்து அலைபவர்களின் போக்கினைக்கண்டித்தார்.
படைப்புகள்:
பாரதியார் எண்ணற்ற கவிதை, உரைநடை நூல்களைப் படைத்துள்ளார். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞானரதம், தராசு போன்ற எண்ணற்ற படைப்புகளைப் படைத்துள்ளார்.
முடிவுரை: வளமான, வலிமையான பாரதத்திற்குத் தேவையான சிறந்த வழிகள் யாவும் அவருடைய பாடல்களில் உள்ளன. அவற்றை பின்பற்றினால் அவர் கனவு கண்ட பாரதத்தை நம்மால் உருவாக்க முடியும்.
இயல்-2 நண்பனைப்பாராட்டிக்
கடிதம் எழுதுக
விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெற்ற நண்பனைப்பாராட்டிக்
கடிதம் எழுதுக.
7, தெற்கு வீதி,
மதுரை-1
11-03-2022.
ஆருயிர் நண்பா,
நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து
நீண்ட நாட்களாகி விட்டன. எனினும், உன்னுடன் பழகிய நாட்கள் எனக்கு எப்போது நினைத்தாலும்
இன்பம் தருவன.மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள
செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.விளையாட்டில் நீ பெரிய அளவில் சாதிப்பாய்
என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப” நாம் தொடக்க கல்வி பயிலும்போதே
தெரிந்தது.நீ இதே போன்று பல வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உனது ஆருயிர் நண்பன்
க.தளிர்மதியன்.
உறைமேல் முகவரி:
த.கோவேந்தன்,
12,பூங்கா வீதி,
சேலம்-4
இயல்-3 நோயற்ற
வாழ்வே குறைவற்ற செல்வம்
முன்னுரை
உடல்நலம் தான் மனித வாழ்வின் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்ˮ என்பர்.நாம் வாழ்வில் பெற்ற செல்வங்களை அனுபவிப்பதற்கு உடல்நலம் மிக அவசியமாகும். உலகில் மனிதன் தனக்கான ஆயுட்காலம் முழுவதும் சிரமம் இல்லாமல் நலமுடன் வாழ வேண்டுமாயின் நோய்களை அண்டவிடாது ஆரோக்கியமாக வாழ்ந்தால் மட்டுமே முடியும்.எனவே நோயின்றி வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என இக்கட்டுரையில் காண்போம்.
நோய்ஏற்படக்காரணங்கள்
நமது உடலில் நோயை ஏற்படுத்தப் பல காரணங்கள் உள்ளன. நோயானது
தொற்று நோய்⸴ தொற்றா நோய்கள் என இரு வகை
நோய்கள் காணப்படுகின்றன.மனிதன் இயற்கையை விட்டு வெளியே வந்தது தான் நோய்கள்
ஏற்படுவதற்கு முதன்மைக் காரணமாக விளங்குகின்றது. மாறிப்போன உணவுப் பழக்கவழக்கங்கள்
நோய் ஏற்பட மற்றுமோர் முக்கிய காரணமாக விளங்குகின்றது.
நோய் தீர்க்கும் வழிகள்
v நமது உடலில் ஏற்படும் நோய்களிற்கு பெரும்பாலானவை
தவறான வாழ்க்கை முறைதான் காரணமாகின்றன. எனவே நமது வாழ்க்கை முறையில் சில
மாற்றங்களை கொண்டு வருதல் மூலம் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.
v முடிந்தளவு இயற்கை உணவுகளை உட்கொள்வது
அவசியமாகின்றது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தினமும் சேர்த்துக் கொள்ளாமல்
விட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் நோயைத் தீர்க்க
முடியும்.
v உணவினை உரிய நேரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி தினமும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். மேலும் சரியான தூக்கம் நமது
நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறைகளில் ஒன்றாகும்.
உணவும் மருந்தும்
நாம் உண்ணும் உணவு புரதம்⸴ கொழுப்பு⸴ மாவுச் சத்து⸴ கனிமங்கள்⸴ நுண்ணூட்டச் சத்துக்கள் போன்ற அனைத்தும் கலந்த
சமச்சீர் உணவுகளாக இருக்க வேண்டும். உணவில் இவற்றை தேவையான அளவு சேர்த்துக் கொள்ள
வேண்டும்.உணவை நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும்⸴ அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு
சுரந்து உணவுடன் கலந்து எளிதில் செரிமானம் அடைந்து உணவிலுள்ள சத்தானது உடலில்
சேரும்.காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ண வேண்டும்⸴ அப்போதுதான் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்து
முழுமையாக கிடைக்கும். இப்படி உண்டால் உணவே மருந்தாகும்.
உடற்பயிற்சியின் தேவை
உடற்பயிற்சியானது உடலின் வளர்ச்சியில் மாற்றத்தை
ஏற்படுத்துகின்றது. அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும்⸴ ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி
வைத்திருப்பதற்கும் உடற்பயிற்சி அவசியமாகும். எனவே தினமும் உடற்பயிற்சி என்பது
மிகத் தேவையான ஒன்றாகும்.
முடிவுரை:
இறைவன்
நமக்குக் கொடுத்த இந்த மானுட வாழ்வினை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் வாழ்வது
சிறந்ததாகும். எனவே உடலை நோயின்றி பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வினை வாழ வேண்டும்.சுவர்
இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல் உடலை வைத்துத்தான் உயிரை
பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும்.எனவே உடல் ஆரோக்கியத்தினைப் போணுவோம்
உயிரைப் பாதுகாப்போம். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வினை வாழ்ந்து மகிழ்வோம்.
மற்ற இயல்களுக்கு விரைவில் பதிவிடப்படும்.