8 TH STD TAMIL-GENERAL ESSAYS AND LETTER WRITTING(கட்டுரை மற்றும் கடிதங்கள்)

  8.ஆம் வகுப்பு-தமிழ் (கட்டுரை,கடிதங்கள்)

இயல்-1 நான் விரும்பும் கவிஞர்-பாரதியார்

முன்னுரை:                                                                                                                                                                                                 இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி, புதுமைக் கவிஞர், தேசியக் கவி, மகாகவி எனப் பாராட்டப்பட்டவர் நம் பாரதியாரே ஆவார். பாட்டுக்கொரு புலவனாய்த் திகழ்ந்த பாரதி தம் பாடல்கள் மூலம் மக்களிடையே தமிழ்ப்பற்று, விடுதலை உணர்வு ஆகியவற்றை வளர்த்தார்.                                                                                                                                                

பிறப்பும் இளமையும்                                                                                 

      பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882 ஆம் நாளில் பிறந்தார். இவரின் பெற்றோர் சின்னசாமி, இலக்குமி அம்மையார் ஆவார். சிறிய வயதிலேயே கவிதை புனையும் திறமையைப் பெற்றார். தமது பதினோறாம் வயதில் பாரதி என்னும் பட்டம் சான்றோர்களால் வழங்கப்பட்டது.                                                                                                                  

விடுதலைவேட்கை:                                                                                                                                                             'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்றார். இப்படிப்பட்ட நம் உயர்ந்த பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருப்பதை எண்ணி 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என பாடினார். வெள்ளையரின் அடக்கு முறைக்கு அஞ்சாது விடுதலை உணர்வு மிக்க பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார். 

ஒருமைப்பாட்டுணர்வு:                                                                                                                                                  எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்திய மக்கள் என்றார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே எனப் பாடி மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தினார்.                                                        

மொழிப்பற்று:                                                                                             பல மொழிகளைக் கற்றிருந்த பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதுஎங்கும்காணோம்என்றுதமிழின்சிறப்பைஎடுத்துரைத்தார்.                                                                                                                   

நாட்டுப்பற்று                                                                                                                                                       .      

பாரதத் தாயின் அடிமைத்தனத்தை தகர்த்தெறிய இவர் எழுதிய பாடல்கள் இளைஞர்களைவீறு கொண்டு எழச் செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேடைகளிலும் வீதிகளிலும் இவருடைய பாடல்களையே பாடினார்கள். சமுதாயத் தொண்டு: சாதிக் கொடுமைகள், பெண்ணடிமை, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை இந்நாட்டிலிருந்து விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மதவெறிப் பிடித்து அலைபவர்களின் போக்கினைக் கண்டித்தார்.                                                                                                               

 டைப்புகள்:                                                                                                                                                                                          பாரதியார் எண்ணற்ற கவிதை, உரைநடை நூல்களைப் படைத்துள்ளார். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞானரதம், தராசு போன்ற எண்ணற்ற படைப்புகளைப் படைத்துள்ளார்.                                                                                                                          

முடிவுரை:                                                                                                                                                                   .                      வளமான, வலிமையான பாரதத்திற்குத் தேவையான சிறந்த வழிகள் யாவும் அவருடைய பாடல்களில் உள்ளன. அவற்றை பின்பற்றினால் அவர் கனவு கண்ட பாரதத்தை நம்மால் உருவாக்க முடியும்.

இயல்-2 நண்பனைப்பாராட்டிக் கடிதம் எழுதுக

 விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெற்ற நண்பனைப்பாராட்டிக் கடிதம் எழுதுக.

7, தெற்கு வீதி,

மதுரை-1

11-03-2022.

ஆருயிர் நண்பா,

       நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன.எனினும், உன்னுடன் பழகிய நாட்கள் எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.விளையாட்டில் நீ பெரிய அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப” நாம் தொடக்க கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே போன்று பல வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இப்படிக்கு,

உனது ஆருயிர் நண்பன்

க.தளிர்மதியன்.

உறைமேல் முகவரி:

     த.கோவேந்தன்,

     12,பூங்கா வீதி,

     சேலம்-4

இயல்-3 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

முன்னுரை                                                                                                                                                        .        .                     உடல்நலம் தான் மனித வாழ்வின் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்ˮ என்பர்.நாம் வாழ்வில் பெற்ற செல்வங்களை அனுபவிப்பதற்கு உடல்நலம் மிக அவசியமாகும். உலகில் மனிதன் தனக்கான ஆயுட்காலம் முழுவதும் சிரமம் இல்லாமல் நலமுடன் வாழ வேண்டுமாயின் நோய்களை அண்டவிடாது ஆரோக்கியமாக வாழ்ந்தால் மட்டுமே முடியும்.எனவே நோயின்றி வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என இக்கட்டுரையில் காண்போம்.                                                                                                                                                                                

நோய்ஏற்படக்காரணங்கள்                                                                                                     

v  நமது உடலில் நோயை ஏற்படுத்தப் பல காரணங்கள் உள்ளன. நோயானது தொற்று நோய் தொற்றா நோய்கள் என இரு வகை நோய்கள் காணப்படுகின்றன.

v  மனிதன் இயற்கையை விட்டு வெளியே வந்தது தான் நோய்கள் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணமாக விளங்குகின்றது. மாறிப்போன உணவுப் பழக்கவழக்கங்கள் நோய் ஏற்பட மற்றுமோர் முக்கிய காரணமாக விளங்குகின்றது.

நோய்தீர்க்கும்வழிகள்                                                                                                                                                                                                              

v  நமது உடலில் ஏற்படும் நோய்களிற்கு பெரும்பாலானவை தவறான வாழ்க்கை முறைதான் காரணமாகின்றன. எனவே நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வருதல் மூலம் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.                                                                                                                                                                      

v  முடிந்தளவு இயற்கை உணவுகளை உட்கொள்வது அவசியமாகின்றது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தினமும் சேர்த்துக் கொள்ளாமல் விட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் நோயைத் தீர்க்க முடியும்.                                                                                                                                                         

v  உணவினை உரிய நேரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி தினமும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். மேலும் சரியான தூக்கம் நமது நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறைகளில் ஒன்றாகும்.

உணவும் மருந்தும்

        நாம் உண்ணும் உணவு புரதம் கொழுப்பு மாவுச் சத்து கனிமங்கள் நுண்ணூட்டச் சத்துக்கள் போன்ற அனைத்தும் கலந்த சமச்சீர் உணவுகளாக இருக்க வேண்டும். உணவில் இவற்றை தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.உணவை நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும் அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலந்து எளிதில் செரிமானம் அடைந்து உணவிலுள்ள சத்தானது உடலில் சேரும்.காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ண வேண்டும் அப்போதுதான் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்கும். இப்படி உண்டால் உணவே மருந்தாகும்.

உடற்பயிற்சியின் தேவை

           உடற்பயிற்சியானது உடலின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கும் உடற்பயிற்சி அவசியமாகும். எனவே தினமும் உடற்பயிற்சி என்பது மிகத் தேவையான ஒன்றாகும்.

முடிவுரை:

          இறைவன் நமக்குக் கொடுத்த இந்த மானுட வாழ்வினை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் வாழ்வது சிறந்ததாகும். எனவே உடலை நோயின்றி பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வினை வாழ வேண்டும்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல் உடலை வைத்துத்தான் உயிரை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும்.எனவே உடல் ஆரோக்கியத்தினைப் பேணுவோம் உயிரைப் பாதுகாப்போம். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வினை வாழ்ந்து மகிழ்வோம்.

 

 

இயல்-4 நூலகம்-கட்டுரை

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக:

நூலகம்

முன்னுரை–  நூலகத்தின் தேவை- வகைகள்- நூலகத்தில் உள்ளவை- படிக்கும் முறை- முடிவுரை

முன்னுரை:

        “நூலகம் அறிவின் ஊற்று

        ”வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்

என்று கூறுகிறார் பேரறிஞர் அண்ணா. இக்கட்டுரையில் நூலகத்தின் தேவை குறித்தும், அதன் வகைகள் குறித்தும், அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்தும் நாம் காண இருக்கிறோம்.

நூலகத்தின் தேவை:

       “ சாதாரண மாணவர்களையும் 

         சாதனை மாணவர்களாக மாற்றுவது நூலகம்” 

    ஏழை மாணவர்களும், இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அன்றாட செய்தித்தாள்களைக் கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது. ஆகவே, இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது .

நூலகத்தின் வகைகள்:

      மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊரக நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம்,பள்ளி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின்நூலகம் என நூலகம் பலவகைப்படும்.

நூலகத்தில் உள்ளவை:

     மொழி சார்ந்த நூல்கள், அறிவியல், வணிகம், நிர்வாகம், கதைகள், சட்டம் போன்ற எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் நூல்களானது நூலகத்தில் இடம் பெற்றிருக்கும்.

 படிக்கும் முறை:

     நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாக படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் நூல்களைக் குறிக்கும் சேதப்படுத்துவது படித்த முடித்தவுடன் மீண்டும் உரிய இடத்தில் நூலை வைக்க வேண்டும்.

முடிவுரை:

             “என்னை தலைகுனிந்து படித்தால்,

              உன்னை நான் தலை நிமிரச் செய்வேன்

     ன்று புத்தகம் மனிதர்களைப் பார்த்துக் கூறுவதாக புகழ் பெற்ற தொடர் உண்டு. அறிவியலும் தொழில்நுட்பமும் ஆயிரம் வளர்ச்சி ஏற்றினார்கள் நூலகமே என்றும் நிலையானது. அதன் மூலமே மனிதன் ஆழ்ந்த அறிவைப் பெறமுடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

 

இயல்-5 வட்டாட்சியருக்கு விண்ணப்பம்

இருப்பிடச்சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.

அனுப்புநர்

     சே.வெண்மதி,

     த/பெ  சேரன்,

     562 திருவள்ளுவர் தெரு,

     வளர்புரம் அஞ்சல்,

     அரக்கோணம் வட்டம்,

     இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

பெறுநர்

      உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,

      வட்டாட்சியர் அலுவலகம்,

      அரக்கோணம்,

      இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

ஐயா,

     பொருள்:இருப்பிடச்சான்று வழங்கக் கோருதல் சார்பு.

        வணக்கம் . நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எனது மேற்படிப்புச் சேர்க்கைக்காக இருப்பிடச்சான்று தேவைப்படுகிறது.நான் அவ்விடத்தில் வசிப்பதற்கான சான்றுகளாக குடும்ப அட்டை நகலையும், ஆதார் அட்டை நகலையும் இணைத்துள்ளேன்.எனவே எனக்கான இருப்பிடச்சான்று வழங்க விரைந்து  நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

                                                                                                                                                 இப்படிக்கு,

தங்கள் பணிவுடைய,

                                                                                                                                               சே.வெண்மதி.

இடம்:அரக்கோணம்,

நாள்: 12-03-2022.

 

உறைமேல் முகவரி:

      உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,

      வட்டாட்சியர் அலுவலகம்,

      அரக்கோணம்,

      இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

 

இயல்-6 கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்(கட்டுரை)

முன்னுரை:

     கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்                                                                                                கவலை உனக்கில்லைஒத்துக்கொள் 

       எத்தொழில் எதுவும் தெரியாமல்                                                                                                இருந்திடல் உனக்கே சரியாமோ?                                                                                                                                 

   என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையவர்கள் பாடிய பாடலில் கூறியுள்ளார்.கைத்தொழிலின் இன்றியமையாமையை உணர்த்தும் பாடல் வரிகள் இவை.இக்கட்டுரையில் கைத்தொழிலின் அவசியம் குறித்துக் காண்போம்.                                                                                                                                                                                

கைத்தொழில் வகைகள்                                                                                                                                    நமது நாட்டில் கிராமங்களே பலவாக உள்ளன. கிராமங்களில் பெரும்பாலோர் பயிர் தொழிலையே செய்கின்றனர்.பயிர் தொழில் செய்யும் விவசாயிகள் ஆண்டில் பல மாதங்கள் வீணே காலத்தைக் கழிக்கின்றனர். அவர்கள் அக்காலத்தில் பல குடிசைத் தொழில்களைச் செய்து, தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.மட்பாண்டங்கள் செய்தல், எண்ணெய் எடுத்தல், உணவுத் தொழிலுக்குத் தேவையான சில கருவிகளைச் செய்தல், நெசவுத்தொழில், பாய்பின்னுதல், கூடைமுடைதல், ஆடுமாடு, கோழி வளர்த்தல் போன்ற பல கைத்தொழில்களைச் செய்யலாம்.                                                                                                                             

 கைத்தொழிலின் தேவை:                                                                                                                                                                                        காட்டுப் பகுதியில் உள்ளவர்கள் தேன் எடுத்தல், மரச்சாமான்கள் செய்தல் போன்ற தொழில்களைச் செய்து தமது வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.குடிசைத் தொழில்களை ஓய்வு நேர வேலையாக மேற்கொள்ளலாம் அல்லது முழுநேர வேலையாக மேற்கொள்ளலாம்.குடிசைத் தொழிலின் மூலம் ஆக்கப்படும் பொருள்களை அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். அவை அன்றாட‌ வாழ்க்கைக்கு பயன்படுவதாக உள்ளன‌.அவை நாள்தோறும் பயன்படுத்தப்படுவதால் அவற்றின் தேவை மிகவும் அதிகமாகிறது. இத்தேவையை இடைவிடாத உற்பத்தியினால் நிறைவேற்றலாம்.                                                                                                                       

  பொருளாதார பயன்                                                                                                                                                                    ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டில் நடைபெறும் தொழில் வளத்தைப் பொருத்திருக்கிறது. தொழில்வளம் மிக்க நாடுகள் செல்வ செழிப்புகள் உள்ளதாக இருக்கின்றன.உதாரணமாக ஜப்பானில் உள்ள பெண்களும் தம் ஓய்வு நேரங்களில் பூ வேலை செய்தல், பின்னுதல் போன்ற கைத்தொழில் செய்து வருகிறார்கள். ஆகையால் ஜப்பான் சிறுதீவுகளாக காட்சியளித்தாலும் செல்வச் சிறப்புடன் விளங்குகிறது.அவர்களைப் போலவே நாமும் உழைத்து நம்நாட்டை உயர்த்த கைத்தொழில் வேண்டும். இது இயந்திரத்தின் உதவியின்றி, சிறிதளவு பணத்தைக் கொண்டு கையால் செய்யப்படுவ‌து. ஆகவே அனைவரும் இதனை எளிதில் மேற்கொள்ளலாம்.        

முடிவுரை:                                                                                                                                               

           எனவே மாணவர்கள், கல்விப் பயிற்சி காலத்திலேயே நெசவு தையல் போன்றவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுக்கொண்டால் நாம் கற்ற கல்விக்கேற்ப வேலையில்லா காலங்களில் நம் பிழைப்புக்கான ஊதியத்தை பெறலாம்.காந்தியடிகள் கூறியது போல, நமது தேவையை நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அயலார் கையை எதிர்பார்க்காமல் சுயசார்பு உடையவர்களாக வாழ கைத்தொழில் உதவும்.


இயல்-7 நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு

முன்னுரை                                                                                                                              

      இந்த சமுதாயத்திற்காக இளைஞர்கள்  ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.              

உதவும்மனப்பான்மை                                                                                                                                     .             .      ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும். ஒரு உயிர் படும் துன்பத்தை கண்டு அதனை தாங்கிக்கொள்ளாமல் உடனேஓடிச்சென்றுஉதவுவதுதான்தொண்டு.                                                        

  முதாய தொண்டு                                                                                                                                                    .                    அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றுவது கடமையாகும்.                                                                                                                                                                     

நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுதல்                                                  

            மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு உரிய மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக தெருக்களை தூய்மையாக வைக்க உதவவேண்டும். மேலும் நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், தவறிய பொருட்களை தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள்மேற்கொள்ளலாம்.                                                                          கல்விப்பணி                                                                                                                                                                      .                 எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை கற்றுக்கொடுக்கலாம். செய்திதாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை, குடும்பநலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய குறும்படங்களை பொதுமக்களிடம் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். 

முடிவுரை                                                                                                                                           .           

       நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நல்ல மாணவர்களாக உருவாக வேண்டும் என்பதே அனைவரின் ஆவல்.அதனை உணர்ந்து இளைஞர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்...

 

                                                                                                                                                                           

இயல்-8 உறவினருக்குக் கடிதம்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

12,தென்றல் நகர்,

திருத்தணி-1.

12-03-2022.

அன்புள்ள அண்ணனுக்கு,

      தங்கள் அன்பு தம்பி தமிழ்வேந்தன் எழுதும் மடல்.நலம், நலமறிய ஆவல். தங்களைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகியிருப்பினும்,தங்களை அவ்வப்போது நினைவு கூர்வதுண்டு.எனது தமிழ் தேடலுக்காகச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி ஒன்று தேவைப்படுகிறது.எங்கள் ஊரில் அது கிடைக்கவில்லை.தாங்கள் வசிக்கும் திருவல்லிக்கேணி வள்ளுவர் பதிப்பகத்தில் கிடைப்பதாக அறிந்தேன்.ஒரு பிரதியை வாங்கி தூதஞ்சல் மூலம் அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

                                                                                                                                                 இப்படிக்கு,

தங்கள் அன்பு தம்பி,

கா.கொற்றவன்.

உறைமேல் முகவரி:

    பூ.சொற்கோ

    54,மறவன் வீதி,

    திருவல்லிக்கேணி,

    சென்னை-14

இயல்-9 உழைப்பே உயர்வு

முன்னுரை                                                                                                                                                                       .              தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்கின்றார் வள்ளுவர்.அதாவது முன்வினையால் ஒரு காரியம் நடைபெறாமல் போனாலும் தனது உடலை வருத்தி உழைக்கும் போது அதற்கான பலன் கிடைக்கும் என்பதே இதன் பொருள் ஆகும்.நாம் முயற்சியுடன் உழைக்கும் போது வெற்றி நமக்கு கிடைத்தே தீரும்.

உழைப்பின்சிறப்பு                                                                                                                                                      .          

      கடின உழைப்பு அனைவருக்கும் சிறப்பையே தரும். நாம் வாழுகின்ற சூழலை உற்று நோக்கினால் ஒவ்வொரு உயிரினத்திடம் இருந்தும் கடின உழைப்பை கற்றுக் கொள்ளலாம்.தேனீக்களும் சிலந்திகளும் கடின உழைப்பிற்கு மிகச்சிறந்த உதாரணமாக கொள்ளப்படுகின்றன.சிலந்தியின் வலை எத்தனை முறை கலைக்கப்பட்டாலும் மீண்டும் தனது வலையை பின்னி வாழும் திறமை கொண்டது.

        தேனீக்கள் சிறியளவு தேனை சேகரிக்க 16 மைல் தூரம் வரை பயணம் செய்து கடினமாக உழைக்கின்றன. உழைப்பு எனப்படுவது ஒவ்வொருவரிற்கும் அளிக்கப்பட்ட வேலையை முழுமுயற்சியுடன் செய்தல் ஆகும். உழைப்பில்லாமல் உயர்வு இல்லை. ஒருவர் எந்தளவிற்கு கடினமாக உழைக்கின்றாரோ அந்தளவிற்கு உயர்ந்த நிலையை அடைய முடியும்.                                                                                                                               

   உழைப்பால் உயர்ந்தவர்கள்                                                                                                                 

         இந்த உலகத்தில் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள் பலரை குறிப்பிடலாம். அவர்களுள் தோமஸ் அல்வா எடிசன், ஆபிரகாம் லிங்கன், அப்துல் கலாம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவார்.

v  கண்டுபிடிப்புக்களின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற தோமஸ் அல்வா எடிசன், கடின உழைப்பிற்கு சிறந்த உதாரணமாக கூறக்கூடியவர்.

v  மின்குமிழைக் கண்டு பிடித்த தோமஸ் அல்வா எடிசன், மின்குமிழ்கள் நீண்ட நேரம் எரிவதற்கான சரியான மின்னிழையை கண்டறிவதற்காக கிட்டத்தட்ட ஜந்தாயிரம் இழைகளை பரிசோதித்தும் தோல்வியையே தழுவினார்.

v  பின்னர் விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்து சரியான இழையை கண்டுபிடித்து உலகத்தையே வியப்பில் ஆழ்த்தினார்.

v  கடின உழைப்பிற்கு இன்னொரு எடுத்துக்காட்டாக விளங்குபவர் ஆபிரகாம் லிங்கன்.

v  செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான இவர் தொடர் தோல்விகளால் மனந்துவண்டு போகாமல் கடினமாக உழைத்து அமெரிக்காவின் மிகச் சிறந்த ஜனாதிபதி ஆனார்.

v  இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாம் சிறுவயதில் பத்திரிகை விற்பது போன்ற சிறு தொழில்களை செய்து வாழ்வில் முன்னேறியவர்.

முடிவுரை                                                                                                                                        

         நூறு பேரை விட சிறந்தவராக விளங்க வேண்டுமென நீங்கள் நினைத்தால் ஏனைய தொண்ணூற்றொன்பது பேரைவிட நீங்கள் கடினமாக உழைத்தாக வேண்டும்.உழைப்பில்லா பிறப்பு இறப்பிற்கு சமம் என்று குறிப்பிடுகின்றார்கள். மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் சோம்பல்தனத்தை கைவிட்டு கடினமாக உழைத்தால் மட்டுமே வையகத்தில் வாழ்வாங்கு வாழ முடியும்.கடின உழைப்பு ஒருவரை சிறப்பான பாதைக்கே இட்டு செல்லும். எனவே கடின உழைப்பை மூலதனமாக இட்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம்.


கட்டுரைகளை PDF ல் பதிவிறக்க

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை