10.ஆம் வகுப்பு – தமிழ் 8 மதிப்பெண் வினா விடைகள்
10.ஆம் வகுப்பு – தமிழ் (வினா எண்: 44 அ மறும் ஆ)
இயல்-2
1) புயலிலே
ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வர்ணனைகளும்,அடுக்குத் தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில்
தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
முன்னுரை:
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு
நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர் அவ்வாறு குடியேறிய இனங்களில் தமிழினமும்
ஒன்று.நூலாசிரியர் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர்
இந்தோனேசியாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது ஆசிரியரின் நேரடி
அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி. அதைப்பற்றி இங்கு
காண்போம்
விடாது பெய்த மழை:
கடுமையான வெயில் மறைந்து,இமை நேரத்தில் புழுக்கம்
ஏற்பட்டது. மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது மீண்டும் மீண்டும் மழை
பெய்தது.கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பாய் மரத்திலுள்ள கயிறுகளை இறுக்கி கட்டினர். அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.இடி
முழக்கம் மின்னல் ஒளி அதேசமயம் விரைவும் பளுவும் கொண்ட மோதல் கப்பலையும் உலுக்கியது.
தள்ளாடிய கப்பல் (தொங்கான்):
மழை பெய்வது அதிகரித்தது. காற்றும், மழையும் ஒன்று
கலந்தது.பலகை அடைப்புக்குள் இருந்து கப்பித்தான் “ஓடி
வாருங்கள், இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்” என்று கத்துகிறான். பாண்டியன்
எழுந்தான்.இடுக்குகளில் முடங்கிக்கிடந்த உருவங்கள் தலைதூக்கின.கப்பல்
தள்ளாடியது.மலைத்தொடர் போன்ற அலைகள் தாக்கின..
பயணிகளின் தவிப்பு:
மாலுமிகள் நீரை இறைத்து ஊற்றுகின்றனர். ஓட்டையை அடைத்தனர். கப்பலின்
இருபுறமும் தேயிலை பெட்டிகளும், புகையிலை சிப்பங்களும் மிதந்தன.பாண்டியன் கடலை பார்த்து மலைத்து நின்றான். கடல்
கூத்து நீண்ட நேரம் தொடர்ந்தது.கப்பல் தன்வசம் இன்றி,
தடுமாறிச் சென்றது.புயல் மயக்கத்திலிருந்து யாரும் இன்னும்
முழுமையாக தெளிவு பெறவில்லை. கப்பித்தான் மேல்தட்டு வந்து வானையும் கடலையும் ஒரு
முறை சுற்றிப்பார்த்தார். பாண்டியன் நிலவரத்தை கேட்டான். அதற்கு கப்பித்தான்
இரண்டு நாட்களில் கரையை பார்க்கலாம் இனி பயமில்லை என்றார்.
கரையைக் காணுதல்:
ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய், கடலோடு கடலாக
மரப்பச்சை தெரிவது போல் இருந்தது. சுமார் அரை மணி
நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகின் அருகில் விளக்குகள் தென்பட்டன.அடுத்த நாள்
கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. தொலைதூர கப்பல்கள்
கரை முழுவதும் நின்றிருந்தன.
முடிவுரை:
சுமத்ரா பயணிகள் துடுப்பு
படகில் இறங்கிப்போய் நடை பாலத்தில் ஏறி நடந்து சுங்க
அலுவலகத்திற்குச் சென்று பயண அனுமதிச் சீட்டினை
நீட்டினர்.”தமிரோ?” என்று ஜப்பானிய
அதிகாரி கேட்டார்.” யா மஸ்தா” இன்று
தமிழர்கள் தெரிவித்தனர். பயணிகளை சில வினாடிகள் நோட்டமிட்ட அதிகாரி சீட்டுகளில்
முத்திரை வைத்து திருப்பிக் கொடுத்தார். புயலிலே ஒரு தோணி கதையில்
இடம்பெற்றுள்ள வர்ணனைகளும் ,அடுக்குத்
தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி
படும்பாட்டை தெளிவுற விளக்கின.
இயல்-3
3) அன்னமய்யா
என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப் பாட்டினை
கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதி கொண்டு விவரிக்க.
முன்னுரை:
கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக
இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற
மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற
கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.
அன்னமய்யாவும், இளைஞனும்:
சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார்.”இவன்
துறவியோ? பரதேசியோ?” என்ற
ஐயத்தை மனதில் கொண்டு ,அருகில் சென்று பார்த்தார். அருகில்
சென்று பார்த்து அவன் ஓர் இளைஞன் என்பதை உறுதி செய்து கொண்டார். அவனது முகம்
பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை
காட்டிய அந்த இளைஞரிடம் போய் அருகில் நின்று
பார்த்தார்.அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?”
என்று கேட்டான்.அன்னமய்யா “அருகிலிருந்து
நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன்
பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான்.
இளைஞனின் பசியைப்
போக்கிய அன்னமய்யா
ஒரு வேப்பமரத்தின் அடியில் மண் கலயங்கள்
கஞ்சியால் நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு
சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். உறிஞ்சியபோது அவளுக்குக் கண்கள் சொருகின.மிடறு மற்றும்
தொண்டை வழியாக இறங்குவது சுகத்தை அளித்ததை முகம் சொல்லியது. அவனுள்ஜீவ ஊற்று பொங்கி, நிறைந்து வழிந்தது
அன்னமய்யாவின்
மனநிறைவு:
புதிதாக
வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான
ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும்
போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப் பார்ப்பதுபோல, அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக்
கொண்டிருந்தார் அன்னமய்யா.
அன்னமய்யாவின் பெயர்
பொருத்தம்:
இளைஞன் எழுந்தவுடன்,” எங்கிருந்து வருகிறீர்கள்?,
எங்கே செல்லவேண்டும்?” என்று அன்னமய்யா
கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்” மிக நீண்ட தொலைவில் இருந்து வருகிறேன்”
என்று கூறிவிட்டு,” உங்கள் பெயர் என்ன?”
என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார்.
இளைஞன் அந்தப் பெயரை இதற்குள் திரும்பத் திரும்பச் சொல்லி
பார்த்துக்கொண்டான்.”எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.அந்த
இளைஞன் தன்னுடைய சொந்தப் பெயர்” பரமேஸ்வரன்” என்றும், புதுப் பெயர்”மணி”
என்றும் அன்னம் ஐயாவிடம் கூறினான்.
சுப்பையாவிடம்
அழைத்துச் செல்லுதல்:
சுப்பையாவும்,அவருடன்இருந்தவர்களும் அன்னமய்யாவையும்,இளைஞனையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சுப்பையா தான் வைத்திருந்த
கம்மஞ்சோறு உருண்டையை அனைவருக்கும் பகிர்ந்து
அளித்தார். அனைவரும் அந்த இளைஞனிடம் அன்பாகப் பேசி, அந்த
உணவை உண்ண செய்தனர். இளைஞன் உணவை உண்டு விட்டு மீண்டும் உறங்கினான்
முடிவுரை:
தானத்தில் சிறந்தது அன்னதானம்
என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம்
கொண்டவனாகவும் விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.
இயல் - 4
3) ”அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப்பயணம்”
என்ற தலைப்பில் கற்பனைக் கதை ஒன்றை எழுதுக.
முன்னுரை:
அறிவியல் வளர்ச்சி மனிதனின் அறிவை
விரிவாக்குகிறது ஐயங்களை நீக்குகிறது எண்ணங்களை மாற்றுகிறது அறிவியல் வளர்ச்சியில்
பெரும்பங்கு வகித்த அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் உடன் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள எனக்கு ஓர் அரிய வாய்ப்பு
கிடைத்தது. அந்த பயண அனுபவத்தை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி.
பேரண்டம் பற்றிய விளக்கம்:
பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியதான ஸ்டீபன் ஹாக்கிங்கின்
ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால்
உண்டானது என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில்
எங்களுக்கு அவர் விளக்கினார்.
இப்புவியின்
படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை மறுத்தார். பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரை கட்டமைக்க
வேண்டியதில்லை என்றார்.
பால் வீதி – விண்மீன்கள்:
விண்வெளியில் பால்வீதியில் எங்கள் விண்வெளி ஓடம் சுற்றிக்
கொண்டிருந்தது அப்போது ஹாக்கிங், ”நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் ஞாயிறும் ஒன்று. ஒரு
விண்மீனின் ஆயுள் காலம் முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது விண்மீன் சுருங்க சுருங்க அதன்
ஈர்ப்பு ஆற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றது ஆகிறது என்று விளக்கினார்.
கருந்துளை விளக்கம்:
கருந்துளை என்பது ஒரு படைப்பின் ஆற்றல் கழிந்து கருந்துளையில்
செல்லக்கூடிய எந்த ஒன்றும் வெளியில் வரவே முடியாது கருந்துளையின் ஈர்ப்பு
பகுதியில் இருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டு கொண்டே இருந்தன கருந்துளை கருப்பாக
இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நேரில் பார்த்த போது தான் அறிந்து கொண்டேன்
அண்டவெளியில் காணப்படும் கருந்துளை படைப்பின் ஆற்றலை என்பதை நான் உணர்ந்தேன்.
முடிவுரை:
நாங்கள் விண்வெளியில் பயணம்
மேற்கொண்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. புதுமையான அனுபவமாகவும் இருந்தது. எனக்குத் தெரியாத நிகழ்வுகளை நன்கு பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டேன். மனமகிழ்வோடு
பூமிக்கு வந்து சேர்ந்தோம். எங்களை அனைவரும் வரவேற்று, பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வு என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக
இருக்கும்.
இயல் - 5
4) ”கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே” என்கிறது
வெற்றிவேற்கை.மேரியிடமிருந்து படிக்கப்பட்ட புத்தகம் அச்சிறுமியின் வாழ்க்கையில்
கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை விவரிக்க.
முன்னுரை:
வரலாறு என்பது பல நிகழ்வுகளைக் கொண்டதாக உள்ளது. அதில் எண்ணற்ற ஆளுமைகளைக்
காணமுடிகிறது. உலகில் பிறந்தவர் பலர் வாழ்வதோடு சரி. சிலர்தான் வரலாறு
ஆகிறார்கள்.கல்வி என்றால் என்னவென்றே தெரியாத ஓர் இருண்ட சமூகத்தில் ஒற்றைச் சுடராகத்
தோன்றி,எண்ணற்ற சுடர்களை ஏற்றியவர் தான் மேரி.
அவரைப் பற்றி இங்கு காண்போம்.
மேரியின்
குடும்பச்சூழல்:
மேரியின் குடும்பத்தினருக்கு பகல் முழுவதும் பருத்திக் காட்டில் வேலைகள்.
ஒரு நாள் ஒரே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கி விடக்கூடாது என்று நினைக்கும்
குடும்பம் அது. பருத்திக் காட்டில் இருந்து பகலில் அம்மா பாட்சி மட்டும் உணவு
சமைப்பதற்காக வீட்டுக்குத் திரும்புவாள்..உணவு தயாரானதும் குழந்தைகளை உணவு உண்ணக்
கூப்பிடுவாள்.
மேரிக்கு நடந்த துன்பம்:
மேரி ஒருநாள் தன் அம்மாவுடன், கூறு மாளிகைக்குச்
செல்கிறாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளின் அழைப்பையேற்று அவர்களோடு
விளையாடுகிறாள். அங்கே, ஒரு புத்தகம் அவளது கண்ணில்
படுகிறது. அந்தப் புத்தகத்தின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்தப்
புத்தகத்தை கையில் எடுத்து அதைப்
புரட்டத்தொடங்குகிறாள்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமிகள்,” நீ அதைத்
தொடக்கூடாது, உன்னால் படிக்க முடியாது” என்று மேரியின் உள்ளம் வருந்தும் வகையில் பேசினர்.அந்த
நிகழ்வு மேரியின் மனதில் மிக ஆழமாகப்
பதிந்துவிடுகிறது.
மேரியின் மனநிலை:
அந்த நாள் முழுவதும் அவள் துயரத்துடன் இருந்தாள்.” நான்
படிக்க வேண்டும். நான் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.நான் எழுதவும் படிக்கவும்
கற்றுக் கொள்ளப் போகிறேன்” என்று தனக்குள்
கூறிக்கொண்டாள்.பள்ளிக்குச் செல்ல விரும்பும் எண்ணத்தைப் பற்றி தனது தந்தையிடம்
கூறினாள்.” இங்கே நமக்கென்று பள்ளிக்கூடம் இல்லையே?” என்று அவர் கூறினார்.
தூண்டுகோல்-
மிஸ்வில்சன் :
ஒரு நாள் மிஸ் வில்சன் என்பவர் மேரி படிப்பதற்குத் தான் உதவி செய்வதாக
கூறினார். மேரி செய்வதறியாது திகைத்து நின்றாள். பிறகு
பருத்தி எடுக்கும் வேலையைத் தொடர்ந்தாள். வேலையை விரைவாக முடிக்குமாறு அனைவரையும்
அவசரபடுத்தினாள்.தான் ஒரு புதிய பெண்ணாக ஆகிவிட்டதாக உணர்ந்தாள்.
குடும்பத்திலிருந்து முதல் பெண் படிக்கப் போகிறாள். புதிய நம்பிக்கை பிறந்தது.
சிறப்பாகக் கல்விகற்ற
மேரி:
மேரி நாள்தோறும் தன் இலட்சியத்தைச் சுமந்து பள்ளிள்ச் சென்றாள்.
நாள்தோறும் புதிய புதிய செய்திகளைக் கற்றாள். பள்ளிக்கூடத்தில் சில வருடங்கள் ஓடி
மறைந்தன. அந்த வருடத்தின் கடைசியில் மேரிக்குப் பட்டமளிப்பு நடந்தது மிஸ் வில்சன்
மேரிக்கு உயர்கல்வி படிக்க உதவினார்.
முடிவுரை:
மனதில் ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால், எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மேரியின் கதை ஒரு சிறந்த சான்றாகும்.உலகில் சிலர் வரலாறாகவே இருக்கிறார்கள். இவர்கள் பாதையே இல்லாத இடத்தில் தங்கள் காலடிகளால் ஒற்றையடிப்பாதை இட்டு அதையே பெரும் சாலையாக உருவாக்குகிறார்கள். அவ்விதமாக மேரி வந்து ஓராயிரம் சுடரை ஏற்றி விட்டாள்.
இயல்-6
5) தன்
கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகிற போது,
ஏற்படும் கலைஞனின் மன உணர்வுகளைப் பாய்ச்சல் என்ற கதையின் மூலம்
விளக்குக
முன்னுரை:
ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத்
தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன்
கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகின்ற போது அவன்
கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு காண்போம்.
அனுமார்:
நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன. சத்தம்
கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும் மின்னல்
வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள் மனிதனிடம் இருந்து
மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில் இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு
ஒன்று மரத்தின் மேலிருந்து இறங்குவதைக் கண்டான்.
அனுமாரின்
நெருப்பாட்டம்:
திடீரென்று மேளமும்,நாகசுரமும் வேகமாக ஒலிக்கத் தொடங்கின.எதற்கென்றே தெரியாமல் ஒரு கூட்டம் திகைத்து பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல்
எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய
தீப்பந்தம் புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது.
அழகுவின் உதவி:
சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட
வாழை இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள்.
அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து
விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு
சென்றான்.சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது
அழகுவின் ஆட்டம்:
அனுமார் கழற்றி வைத்திருந்த துணி, சலங்கை,முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார்
போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே
ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார் தூணில்
சாய்ந்து கொண்டு “பரவாயில்லை கட்டிக்கிட்டு ஆடு
என்றார்”. அவனும் நன்றாக ஆடினான்.
அனுமார் அடைந்த
மகிழ்ச்சி:
அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான்.
அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே
பிடிச்சுகிட்டியே” என்றார்.அனுமார் அம்பு போல அவன்
முன் பாய்ந்தார். அழகு அனுமாரின் கை இடுக்கில் புகுந்து வெளியே சென்றான். பாய்ந்த
வேகத்தில் கீழே விழப் போன அனுமார் தரையில் கையூன்றி சமாளித்து நின்று, வெறுமை நிறைந்த மனதோடு இவனைத் திரும்பிப் பார்த்தார்.
முடிவுரை:
“என்னலே, எனக்கே பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுற” என்று கூறிக் கொண்டு
இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக் கொண்டன.
அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல் தன் ஆட்டத்தில்
மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தான்.
இயல்-9
6) அழகிரிசாமியின்" ஒருவன் இருக்கிறான்" என்னும் சிறுகதையில்
மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக
முன்னுரை:
அறிவியல் வளர்ச்சியால்,
உலகம் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத்
தக்கதாகும்.மனிதநேயம் நலிந்து வரும் இவ்வுலகில், எங்கேயாவது
எப்போதாவது மனிதநேயம் அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர
நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும்
வகையில்,கு.அழகிரிசாமி தனது "ஒருவன் இருக்கிறான்"
என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம் ஆகிய
இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.
குப்புசாமியின் குடும்ப நிலை:
காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். விறகு கடையில், வேலை
செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி.
நோயுற்ற குப்புசாமி:
சிறிது நாட்கள் கழித்து
குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக்
கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான்.
அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு
வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு
இருந்தான்.
கடிதத்தில் இருந்த செய்தி:
அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன்
உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமி
தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும் எழுதியிருந்தான். கடன் வாங்கி
மூன்று ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளதாகவும், நேரில்
வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக
இருக்கும் என்பதால், பணத்தைக் கொடுத்து விட்டதாகவும்
எழுதியுள்ளான். இதை மட்டும் வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின்
பக்கத்து வீட்டு நபரையும் மனமாற செய்தது.
ஆறுமுகம் :
குப்புசாமி வேலைசெய்த
சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை ஒன்றில் கூலி வேலை செய்யும்
ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன்
அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு
அறிமுகமானவர் குப்புசாமியை
மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து
குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.
முடிவுரை:
பண்புடையவர்களால்தான் இவ்வுலகம்
நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற
வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும்
ஆறுமுகமும்.