8. ஆம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு: 8.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: கவிதைப்பேழை(தமிழ்மொழி வாழ்த்து)
உரைநடை உலகம் (தமிழ் வரிவடிவ வளர்ச்சி)
நாள் : ஜனவரி முதல் வாரம்
(03-01-2022 முதல் 08-01-2022 வரை)
1.அறிமுகம்:
மொழி கருத்தை அறிவிக்கும் கருவி மட்டுமன்று; அது மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது; உணர்வுடன் கலந்தது.
தமிழர்கள் தம் தாய் மொழியாகிய தமிழை உயிராகக் கருதி போற்றி வந்துள்ளனர். புலவர் பலர் தமிழைப் பல வகையாக வாழ்த்திப் பாடியுள்ளனர் அத்தகைய பாடல் ஒன்றை இங்கு அறிவோம்.
மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
2.படித்தல்:
செய்யுள் மற்றும் உரைநடைப் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் மற்றும் உரைநடைப் பகுதியைப் படித்தல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
3.மனவரைபடம்:
தமிழ்மொழி வாழ்த்து
4.தொகுத்தலும்,வழங்குதலும்:
தமிழ்மொழி வாழ்த்து:
நமது பாடப் பகுதியில் உள்ள தமிழ் மொழி வாழ்த்தை இயற்றியவர் பாரதியார் ஆவார்.
அவரது இயற்பெயர் சி.சுப்பிரமணியன் என்பதாகும்.
பாரதியார் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போரிற்கு வித்திட்டார்.
பாரதிதாசன் பாரதியாரை ”சிந்துக்குத் தந்தை” என்று போற்றுகிறார்.
பாரதியார், ”தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!” , “ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ் மொழி வாழ்க!” என்று தமிழ் மொழியை வாழ்த்துகிறார்.
தமிழ் வரிவடிவ வளர்ச்சி:
தொடக்க காலத்தில் எழுத்து என்பது பொருட்களின் ஓவிய வடிவமாக இருந்தது. வரிவடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
ஓவிய எழுத்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து ஒலி எழுத்து நிலை தோன்றியது.
எழுத்துகளின் வரிவடிவம் விரைவாக வளர்ச்சி அடைவதற்கு அச்சுக்கலை பெரிதும் உதவி செய்தது.
கடைச்சங்க காலத்தில் கண்ணெழுத்துகள் தோன்றின.
தொல்காப்பியர் காலத்தில் எகர,ஒகர எழுத்துக்களைக் குறிக்க அவற்றின்மேல் புள்ளி வைக்கும் வழக்கம் இருந்துள்ளது.
தற்காலத்தில் நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிக்குப் பதிலாக துணைக்கொம்பும், ஐகாரத்தைக் குறிக்க இணைக்கொம்பும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர்.
6.மதிப்பீடு:
மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.
சிந்துக்குத் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
பாரதியாரின் இயற்பெயர் என்ன?
வைப்பு என்ற சொல்லின் பொருள் என்ன?
கண்ணெழுத்து எக்காலத்தில் தோன்றியது?
புள்ளி வைத்து பயன்படுத்தப்பட்ட உயிர் எழுத்துகள் யாவை?
7. குறைதீர் கற்றல்:
கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்
8.எழுதுதல்:
மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.
மனப்பாட பாடலை படித்து வீட்டுத் தேர்வு எழுதி வரச் செய்தல்.
9.தொடர்பணி:
தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை இசையுடன் பாடி மகிழச் செய்தல்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்மொழி வரிவடிவ வளர்ச்சி அடைந்து எவ்வாறு இருந்தது என்பதைக் கண்டறிந்து அட்டவணையாகத் தொகுத்து வரச்செய்தல்.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:
படவீழ்த்தி
கணிப்பொறி
பாடப்புத்தகம்
கரும்பலகை